அவள்!

அவள்!

பெங்களூர்,மடிவாலாவில் உள்ள அந்த பிக் பஜாரில்,வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு,பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றிருந்தேன்.வாரக் கடைசி ஆதலால்,கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது.வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது.கால மாற்றதினாலும்,பொருளாதார மாற்றதினாலும்,அரிசி,பருப்பில் தொடங்கி காய்கறி வரை எல்லா பொருட்களும்,குளிரூட்டப்பட்ட அந்த ஒரே கட்டிடத்தில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.இனி என்ன செய்ய போகிறார்கள் மளிகைக்கடை அண்ணாச்சிகளும் ,கீரைக்கார அக்காக்களும் ,பால் கார பெரியம்மாக்களும் என்ற கேள்வி என்னுள் ஓடிக் கொண்டு இருந்தது.அப்பொழுது எனக்கு ரெண்டு பேருக்கு முன்னால் நின்று கொண்டு இருந்த பெண்,தனது கைத் தொலைபேசியில்,யாரிடமோ சன்னமான குரலில் தமிழில் பேசிக் கொண்டு இருந்தாள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு,பெங்களூர் வந்த புதிதில் யார் தமிழில் பேசினாலும் உடனே திரும்பி பார்க்க தோன்றும்.இப்பொழுது அப்படி இல்லை,தெருவோரக் கடைகளிலே தமிழில் பேரம் பேச முடிகிறது.அந்தப் பெண்,தமிழில் பேசியது என் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும்,அந்தக் குரல் எனக்கும் மிகவும் பரிச்சயமானதாக இருந்தது.மீண்டும் அவளை உற்று பார்த்தேன்.அது,திவ்யா . சிறு வயதில்,பள்ளியில் என்னுடன் ஒன்றாகப் படித்தவள்.தான் அழகு என்று தெரிந்திருந்தும் "பாருங்கப்பா நான் ரொம்ப அழகாக்கும்" என்று ஊரை கூட்டி கொக்கரிகாதவள்.இப்பொழுது அவளது நெற்றி வகிடில் இருந்த குங்குமம் அவளது அழகிற்கு அழகாக பொருந்தியது.அவளை அப்பொழது அங்கு பார்பேன் என்று எதிர்பார்கவில்லை.அது சரி,வருடக்கணக்கில் பழகிய நண்பர்கள் ஒற்றை நாளில் பிரிவதும்,பிரிந்து சென்ற இருவர் எங்கோ எதோ ஒரு சந்தர்பத்தில் சந்திப்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தில் தானே உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது.

நான் அவளை பார்த்ததை அவளும் கவனித்து இருக்க வேண்டும்.ஒரு முறை திரும்பி பார்த்தவள்,என்னை அடையாளம் கண்டு கொண்டு உடனே மலர்ந்து சிரித்தாள்."ஹே தரன்" என்று சொல்லிக் கொண்டே தனது பொருட்களை எடுத்து கொண்டு என்னருகில் வந்தாள்.வழக்கமான விசாரணை கேள்விகளால் ஆரம்பமானது எங்கள் உரையாடல்.இருந்தாலும் வரிசையில் ,எங்கள் அருகில் இருந்தவர்கள் எங்கள் பேச்சை கவனிப்பது போல் தோன்றியதால்,சிறிது குறைவாகவே பேசினோம்.

திவ்யா , எனது பள்ளித் தோழி.பள்ளித் தோழி என்று சொல்வதை விட "சண்டைக்கோழி" என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.எனக்கு, பாடப் புத்தகங்களுடன் மல்லு கட்டுவது ஒரு வேலை என்றால்,இவளுடன் மல்லு கட்டுவது மற்றொரு வேலை.

"அது என்ன ஸ்கூல் people leader னா பசங்க தான் இருக்கனுமா?பொண்ணுங்க இருக்க கூடாதா" ன்னு பள்ளி தலைமை ஆசிரியை முன்னால் என்னை பஞ்சாயத்திற்கு இழுத்தவள்.

தலைமை ஆசிரியை சிரித்துக் கொண்டே என்னிடம் "என்ன பண்ணலாம் ன்னு" கேக்க,நான் உடனே "அவளே வேணும்னா இருந்துட்டு போகட்டும்.நான் வேணும்னா விட்டு கொடுத்துடறேன்" ன்னு சொல்ல

"அது என்ன இவன் விட்டு கொடுக்கிறது" ன்னு ,அதுக்கும் சண்டை.

மெல்ல நகர்ந்த வரிசையில்,இப்பொழுது எங்கள் முறை வந்தது.பணம் செலுத்தி,பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிய வந்தோம்.

"வீட்டுக்கு வா,ஒரு காபி குடிச்சிட்டு போகலாம்" அவள்

"இல்ல பரவாயில்ல.இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்" - நான் விலக முயற்சிக்க,அவள் விடுவதாக இல்லை.

"இன்னொரு நாள் எப்போ வரப் போற நீ?.இப்போ மீட் பண்ணினதே ஆச்சர்யமா இருக்கு.வீடு பக்கதுல BTM ல தான்.வா"

எனக்கும் அவளுடன் கொஞ்சம் பழைய கதைய பேசிக் கொண்டு இருந்தால்,நன்றாக இருக்கும் போல தோன்றியது.சரி என்றுக் கூறி ஆட்டோவை அழைத்தோம்.

ஆட்டோவில் ஏறியதும் வேலை,குடும்பம் என்று பேச ஆரம்பிக்க,அவளது கைபேசி ஒலித்தது.எடுத்துப் பார்த்தவள்,

"ஒரு நிமிஷம்.என்னோட ஹஸ்பன்ட் " என்று சொல்லி போனில் பேச ஆரம்பித்தாள்.எனக்கும் அவளைப் பற்றி யோசித்துப் பார்க்க அந்த இடைவெளி தேவைப்பட்டது.

பள்ளியில் மதிப்பெண்களில் எப்பொழுதும் அவள் தான் முதலிடம்.ஒரு பெண் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறுவதென்பது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் இல்லை.அந்த மாதிரியான பெண்கள் இதுவரை என்னை ஈர்த்ததும் இல்லை.ஆனால் திவ்யா வித்தியாசமானவள்.உலகத்தை பற்றிய அவளது விஸ்தாரமான அறிவு என்னை ஆச்சர்யப் படுத்தி இருக்கிறது .

"என்ன இருந்தாலும் காந்தி பண்ணினது தப்பு.எதுக்கு இவரு பாகிஸ்தான் -னை பிரிச்சிக் கொடுக்கணும்?.இப்போ பாரு எவ்வளவு பிரச்னை"

"பிடல் கஸ்பரோ மாதிரி ஒரு தலைவர் எல்லா நாட்டுக்கும் தேவை.அப்போ தான் இந்த அமெரிக்காவ தலைல தட்டி வைக்க முடியும்"

என்று ஆரம்பித்து,எனக்கு ரோஜா செடியை பதியம் போடும் தொழில்நுட்பம் வரைக் கற்று கொடுத்தது அவள் தான்.நான்,சிறுவர் மலரில் இருந்து மாறி,வாரமலர் போய்,விகடனையும்,குமுதத்தையும் கையில் எடுத்திருந்த காலக் கட்டம்.என் கையில் சிவகாமியின் சபதத்தையும்,பொன்னியின் செல்வனையும் திணிதவள்.பெரிய அளவில் இலக்கிய ஈடுபாடோ,அறிமுகமோ,அனுபவமோ இல்லாத நாட்கள் அவை.வத்தியதேவனையும்,நந்தினியையும் அவள் விவரிக்கும் பொழுது சில சமயம் எரிச்சலாக கூட இருக்கும்."நியூட்டன் தியரியும்,pythogoras theoramum அறிவ தான் வளர்க்கும் ஆனா இந்த மாதிரி புக்ஸ் தான் நம்ம வாழ்க்கை வாழ தேவையானத சொல்லி கொடுக்கும்" இது அடிக்கடி அவள் என்னிடம் சொல்லும் வார்த்தைகள்.

தொலைப் பேசியில் பேசி முடித்திருந்தாள்.

"என்ன சொல்றார் உன்னோட ஹஸ்பன்ட்?"

"அவரு வேலை விஷயமா வெளியூர் போயிருக்கார்.அதன் சாப்பிடனான்னு விசாரிச்சார். ஸ்கூல் லைப் எல்லாம் நியாபகம் இருக்கா உனக்கு?.எவ்வளவு சண்டை போடுவேன் உன்கூட "

"சாரி மன்னிச்சிக்கோ" இப்படி எதாவது அசட்டு தனமாக பேசுவாளோ என்று பயந்தேன்.ஆனால் அவளோ

"நிறைய தடவை யோசிச்சி பார்த்திருக்கேன்.இப்போ கூட உங்கிட்ட சாரி எல்லாம் கேக்கணும்னு தோணினதே இல்ல.எதோ ஒரு உரிமையோட சண்டை போடுகிடது மாதிரி தான் தோணுது.அம்மா கிட்ட சண்டை போட்டுட்டு சாரி சொல்லுவோமா அத மாதிரித்தான்"
அவளது எண்ணம் எனக்கு பிடித்திருந்தது.லேசாக சிரித்தேன்.

வீடு வந்து சேர்ந்திருந்தோம்.இரு படுக்கை அறை கொண்ட அழகான flat. "வீடு புதுசா?" நான் கேக்க
"ஆமா.வாங்கி ரெண்டு மாசம் தான் ஆச்சு.லோன் வாங்கி வீடு கட்டிட்டு இப்போ லோன அடைகுறதுகாக அவங்க ஊரு ஊரா சுத்திக்கிட்டு இருக்காங்க.வீட்டுல நாலு நாள் சேர்ந்திருந்தா பெரிய விஷயம்" - வாழ்கையின் யதார்த்தத்தை போட்டு உடைத்தாள்."இரு, டீ எடுத்துட்டு வரேன்" சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.நான் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து,வீட்டை பார்த்தேன்.நான் எதிர்பார்த்தது மாதிரியே சுத்தமாக வைத்திருந்தாள்.எல்லா பொருட்களும் அது, அது இருக்க வேண்டிய இடத்தில ஒழுங்காக வைக்கப்பட்டு இருந்தது.ஆனால் நான் எதிர்பார்த்து இல்லாமல் இருந்தது, புத்தக அலமாரி.மருந்துக்கு கூட ஒரு புத்தகத்தை காண முடியவில்லை.

டீ எடுத்துக் கொண்டு வந்தவளிடம் பேச ஆரம்பிதேன்

"கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?"

"அதுக்கு என்ன நல்லா இருக்கு.நல்லா பார்துகுறார்.வீட்டுல எல்லா சாமானும் இருக்கு.ஒரு வேலையும் கிடையாது.அப்போ அப்போ போர் அடிக்கும்" அவள் தான் சந்தோசமாக இருபதாக எனக்கு காட்டிக் கொள்ள விரும்புகிறாள் என்று எனக்கு தோன்றியது.அவளது இயல்பான குணத்திற்கு இந்த செயற்கை தனம் பொருந்தவில்லை.

"நேரம் நிறைய இருந்துச்சுனா நல்ல புக்ஸ் வாசிக்க வேண்டியது தான? நீ தான் நிறைய வாசிப்பியே"

"அதெல்லாம் அந்த காலம்.அவருக்கு புக்ஸ் வாங்குறதே புடிக்காது.புக்ஸ்-கு செலவு பண்றது வீண் செலவுன்னு சொல்லி திட்டுவாரு"
எனக்கு முதல் முறையாக அவள் மேல் பரிதாபம் வந்தது.அவள் வீட்டில் ஒரு புத்தகம் கூட இல்லாததின் காரணம் புரிந்தது.

"அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.தங்கச்சிக்கு அடுத்த மாசம் கல்யாணம்.பத்திரிகை வந்ததும் அனுப்புறேன்.கண்டிப்பா வரணும் சரியா?.முடிஞ்சா மத்த பிரிஎண்ட்ஸ்-யும் கூப்பிடுரேன்.எல்லாரும் மீட் பண்ணினது மாதிரியும் இருக்கும்.வீட்டுல வச்சி சொல்றேன்னு தப்ப நினைச்சுக்காத"

"இல்ல அதெலாம் ஒன்னும் நினைக்கலை. கண்டிப்பா வரேன்"

ஒரு அரை மணி நேரம் பேசி இருந்து விட்டு கிளம்ப தயாரானேன்.அந்த அரை மணி நேரத்தில் அவளது பேச்சு குடும்பம்,வேலை,நண்பர்கள் என்றுதான் இருந்ததே தவிர,அவளது உதடுகள் ஒரு முறை கூட பாகிஸ்தானையோ,காஸ்பரோவையோ உச்சரிக்க வில்லை.அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு வாசலிற்கு வந்து காலணியை அணிந்து கொண்டு இருந்தேன்.வாசலுக்கு வந்தவள்

"தரன்,தங்கச்சி கல்யாணத்திற்கு வரும் போது எழுத்தாளர் ராமகிருஷ்ணன்னோட "உறுபசி" நாவல் வாங்கிட்டு வரியா? .அன்னைக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல பார்த்தேன்.படிக்கணும் போல இருக்கு" தயங்கி தயங்கி கேட்டாள்.

அவளிடம் இருந்து அப்படி ஒரு கோரிக்கையை நான் எதிர்பார்திருந்திகவில்லை எனது உணர்சிகளை அடக்கி கொண்டு "கண்டிப்பா வாங்கிட்டு வரேன்னு " சொல்லி விட்டு கிளம்பினேன்.

நிசப்தமான இரவில்,உதிரும் சருகுகளின் சத்தம் கூட பெரிதாக கேட்பது உண்டு.அனால் இன்னும் பல வீடுகளில் அடுப்பறையிலும்,படுக்கைஅறையிலும் வெளிப்படும் விசும்பல்கள் வெளியே கேட்பது இல்லை.

-தரன்

Comments

  1. நான் ஆச்சரியப்பட்ட வரி,
    //தான் அழகு என்று தெரிந்திருந்தும் "பாருங்கப்பா நான் ரொம்ப அழகாக்கும்" என்று ஊரை கூட்டி கொக்கரிகாதவள்

    இப்படி ஒரு பெண்ணா ?, இருக்கலாம், !

    ReplyDelete
  2. அருமை நண்பா!!

    ReplyDelete
  3. ரெம்ப நல்லா இருக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னதான் பண்றோம்?